அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹுத் தஆலாவின் திரு நாமத்தால்,
அஷ்ஷெய்க் ஏ.சி. அகார் முஹம்மத் 1960ம் ஆண்டு ஏப்ரல் 23ம் திகதி இலங்கையின் வடமேல் மாகாணத்தில் குருணாகலை நகருக்கு அண்மையில் உள்ள 'தோரயாய' எனும் கிராமத்தில் பிறந்தார். இவரது தந்தை அப்துல் கரீம், தாயார் கமறுன் நிஹார்.
மூன்று சகோதரர்களையும் ஒரு சகோதரியையும் கொண்ட இவர் குடும்பத்தில் மூன்றாமவர். 1988ம் வருடம் திருமண பந்தத்தில் இணைந்த இவருக்கு ஒரு ஆண், இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.
அஷ்ஷெய்க் அகார் முஹம்மத்; தனது ஆரம்பக்கல்வியை தோரயாய அத்தாரிக் முஸ்லிம் வித்யாலயத்திலும் பின்னர் பக்மிகொல்ல அல்மினா முஸ்லிம் மகா வித்யாலயத்திலும் தெலியாகொன்ன ஹிஸ்புல்லா முஸ்லிம் மகா வித்யாலயம் என்பவற்றிலும் பெற்றுக் கொண்டார். 1976ம் ஆண்டு தனது உயர்கல்வியை தொடர்வதற்காக பேருவலை ஜாமிஆ நளீமியா கலாபீடத்தில் பிரவேசம் பெற்ற இவர் 1983ம் ஆண்டு முதற்தர சித்தியுடன் நளீமியா பட்டச்சான்றிதழை பெற்றுக்கொண்டார். 1984ம் அண்டு பேராதனை பல்கலைக்கழகத்தின் (வெளிவாரி) பொதுக் கலைமாணிப் பட்டப்பரீட்சையில் 2ம் தர உயர் சித்தியடைந்தார். 1994ஆம் ஆண்டு முதுதத்துவமாணி பாடநெறிக்காக தன்னை பதிவு செய்து கொண்ட இவர் 1995ஆம் ஆண்டு அதன் எழுத்துப் பரீட்சையை வெற்றிகரமாக பூர்த்தி செய்த நிலையில் உள்ளார்.
பதவிகளும், நிறுனங்களில் அங்கத்துவமும்
983இல் நளீமிய்யாவின் பட்டப்படிப்பை முடித்ததையடுத்து அதன் விரிவுரையாளராக நியமிக்கப்பட்ட இவர் 1992 - 2000 ஆண்டு வரை தழடிநளீமிய்யாவின் கல்வித்துறை பீடாதிபதியாக பணியாற்றினார். 2001ஆம் ஆண்டு நளீமிய்யாவின் பிரதிப்பணிப்பாளராக பதவியுயர்வு பெற்ற இவர் இன்று வரை அப்பதவியை வகித்துவருகின்றார்.அவ்வாறே இவர் கடந்த காலங்களில் பின்வரும் பதவிகளை வகித்துள்ளார்:
. 1991ல் பேராதனை பல்கலைக்கழக பகுதி நேர விரிவுரையாளர்
. மாதம்பை இஸ்லாஹிய்யா அரபுக்கல்லூரி, நிகவரெட்டிய அமீனியா அரபுக்கல்லூரி என்பவற்றின் சிறப்பு விரிவுரையாளர்.
. அரசாங்க பாடத்திட்ட இஸ்லாம் பாட ஆலோசனைக் குழு உறுப்பினர்
. தொலைக்கல்வி பாடத்திட்ட ஆலோசகர்
. ஐம்இய்யத்துல் உலமா முன்னால் உதவி பொதுச் செயலாளர்
. ஐம்இய்யத்துல் உலமா முன்னால் செயற்குழு மற்றும் பத்வாக் குழு உறுப்பினர்
தற்போது வகித்து வரும் பதவிகள்:
. ராபிததுன் நளீமிய்யீன் உயர்மட்ட ஆலோசகர் (ஜாமியா நளீமிய்யாவின் பழைய மாணவர் அமைப்பு)
. ISS(Islamic Service Society), ALIF (Aluthgama Investment Fund) இஸ்லாமிய நிதி நிருவனங்களின் ஷரீஆத் துறை ஆலோசகர்.
. அரபு மத்ரஸா பாடத்திட்ட ஆலோசகர்
. இஸ்லாமிய சிந்தனை (முத்திங்கள் ஆய்வு சஞ்சிகை) ஆலோசனைக் குழு உறுப்பினர்
. அகரம், சிட்டு (மாதாந்த சிறுவர் சஞ்சிகை) ஆலோசனைக் குழு உறுப்பினர்.
. செயலாளர் - ஹலால் பிரிவு, அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா
. உறுப்பினர் - பத்வாக் குழு, அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா
. உறுப்பினர் - கல்விக் குழு, அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா
. ஆலோசகர் - கபாலா (KAFALA) நிறுவனம், கொழும்பு
. உறுப்பினர் - அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா மத்திய செயற்குழு
. மற்றும் பல உள்நாட்டு சன்மார்க்க, சமூக சேவை, கல்வி நிறுவனங்களின் ஆலோசகர்.
. IMHCS(Institute of Muslim Historical and Cultural Studies) நிறைவேற்றுக் குழு உறுப்பினர்
தஃவா
ஷெய்க் அகார் முஹம்மத் அவர்கள் மாணவப் பருவம் முதலே இஸ்லாமிய அழைப்புப் பணியில் தீவிர ஈடுபாடு கொண்டவர். இலங்கை இஸ்லாமிய தஃவா களத்தின் முன்னோடி தாஈகளில் ஒருவர். தமிழ், சிங்களம், அரபு, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் புலமையுள்ள இவர் நாடறிந்த பேச்சாளராகவும் எழுத்தாளராகவும் தஃவா பயிற்றுவிப்பாளராகவும் அறியப்பட்டுள்ளார். இஸ்லாமிய தஃவா தொடர்பில் பல்வேறு நாடுகளுக்கும் பயணங்களை மேற்கொண்டுள்ளார்.
எழுத்துத்துறை
நளீமிய்யாவின் முத்திங்கள் வெளியீடான இஸ்லாமிய சிந்தனையின் முன்னால் நிர்வாக ஆசிரியரான இவர் தற்போது அதன் ஆலோசனைக் குழு உறுப்பினராக இருந்து வருகிறார். இஸ்லாமிய சிந்தனை, அல்ஹஸனாத் போன்ற சஞ்சிகைகளில் இவர் தொடர் கட்டுரைகளை எழுதி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. தேசிய நாளிதழான தினகரனிலும் இவரது கட்டுரைகள் அவ்வப்போது வெளிவந்துள்ளன. இவர் இஸ்லாமிய சிந்தனையில் தொடராக எழுதிய ஹதீஸ் விளக்கம், பிக்ஹுஷ்ஷரிஆ, வானொலி முஸ்லிம் சேவை உரைகள் பின்னர் நூல்களாக வெளிவந்துள்ளன. அதே போல் இஸ்லாமிய சிந்தனைத் தெளிவை வழங்கும் வகைளில் நூல்களையும் எழுதியுள்ளார். அவை:
1. நபிவழி 1,2
2. சன்மார்க்க சட்டவிளக்கம்
3. இஸ்ரா, மிஃராஜ் ஒரு புதிய பார்வை
4. கல்வி, கற்றல், கற்பித்தல் இஸ்லாமிய நோக்கு
5. ஹலால், ஹராம் விதிமுறைகளும் உணவு, உடை வரையறைகளும்
6. நாளும் ஓத நபிகளாரின் திக்ருகள்
நபிவழி, சன்மார்க்க சட்டவிளக்கம், கல்வி கற்றல் கற்பித்தல் ஆகிய நூல்கள் வாசக வரவேற்பைப் பெற்றதுடன் பல பதிப்புக்களை கண்டுள்ளன.
தொலைக்காட்சி, வானொலி நிகழ்ச்சிகள்
இலங்கை முஸ்லிம் சேவையில் பல வருடங்களாக தொடர் பேச்சுக்கள், விஷேட தின உரைகள், குத்பாப் பிரசங்கங்கள், கலந்துரையாடல்கள், அல்குர்ஆன் விளக்கங்கள், ரமழான் நிகழ்ச்சிகள், மணிமொழிகள், இஸ்லாமிய நற்சிந்தனை போன்ற நிகழச்சிகளில் இவர் பங்களித்துள்ளார். இவை தவிர, 'அரபா தின நேரடி அஞ்சல்' முஸ்லிம் நாடுகள் (தொடர் பேச்சு) 'முஸ்லிம் சிறுபான்மை நாடுகள் (தொடர் பேச்சு)' 'நடைமுறை வாழ்வில் இஸ்லாம் (தொடர் பேச்சு)' போன்ற நிகழ்ச்சிகள் பலரது வரவேற்பையும் பெற்ற நிகழ்ச்சிகளாகும். அதே நேரம் பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்குபற்றியுள்ளார்;. தற்போது இவர், கலாநிதி சுக்ரியோடு இணைந்து 'பைத்துல் ஹிக்மா- அறிவரங்கம்' எனும் நிகழச்சியை சிறப்பாக நடாத்தி வருகின்றார்.
கருத்தரங்குகள், மாநாடுகள், கல்விமுகாம்கள், விவாதங்கள்
அஷ்ஷெய்க் அகார் முஹம்மத் அவர்கள் கீம்வரும் கருத்தரங்குகள், மாநாடுகள், கல்விமுகாம்கள், விவாதங்களில் கலந்து கொண்டு பங்களிப்புச் செய்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
1. பித்அத் கருத்தரங்கு
2. ஸகாத் கருத்தரங்கு
3. மத்ஹப்கள் பற்றிய கருத்தரங்கு
4. அல்குர்ஆன், சுன்னா கருத்தரங்கு
5. பிக்ஹுல் அகல்லியாத் கருத்தரங்கு
6. இஜ்திஹாத் கருத்தரங்கு
7. கற்றல், கற்பித்தல் கருத்தரங்கு
8. சமூக ஒற்றுமை மாநாடுகள்
9. ஷீஆ கருத்தரங்கு
10. சீறா மாநாடு
11. ஜம்இய்யத் தலபாவின் இளைஞர் மாநாடுகள்
12. மூன்று நேரத் தொழுகை குறித்த விவாதம்
பயிற்சிக் கருத்தரங்குகள்:
1. இஸ்லாம் பாட ஆசிரியர்களுக்கான பயிற்சிக் கருத்தரங்குகள்
2. அரபுப்பாட ஆசிரியர்களுக்கான பயிற்சிக் கருத்தரங்குகள்
3. முஸ்லிம் ஆசிரியர்களுக்கான பயிற்சிக் கருத்தரங்குகள்
4. முஸ்லிம் அதிபர்களுக்கான பயிற்சிக் கருத்தரங்குகள்
5. உலமாக்களுக்கான பயிற்சிக் கருத்தரங்குகள்
6. தாஈகளுக்கான பயிற்சிக் கருத்தரங்குகள்
7. கதீப்மார்களுக்கான பயிற்சிக் கருத்தரங்குகள்
8. பெண் தாஈக்கள், ஆலிமாக்களுக்கான பயிற்சிக் கருத்தரங்குகள்
தஃவாப் பயணங்கள்
சர்வதேச ரீதியாக பல நாடுகளுக்கும் தஃவா பயணங்களை மேற்கொண்டுள்ளார். இவர்; பயணம் மேற்கொண்ட நாடுகள்:
. அவுஸ்திரேலியா
. லண்டன்
. குவைத்
. மலேஷியா
. பஹ்ரைன்
. சிங்கப்பூர்
. இந்தியா
. சவூதி அரேபியா
தஃவா நோக்கங்களுக்காக மாத்திரமன்றி கல்விசார் நோக்கங்களுக் காகவும் பல்வேறு நாடுகளுக்கு பயணங்களை மேற்கொண்டுள்ளார்.
• ஐக்கிய அரபு இராச்சியம் (UAE)
• குவைத்
• பாகிஸ்தான்
• பஹ்ரைன்
• மலேஷியா
• சவூதி அரேபியா
இப்பயணங்களின் போது இவர் சர்வதேச ரீதியாக புகழ் பெற்ற நிறுவனங்களையும் தரிசித்துள்ளார்.
. ஜம்இய்யத்துல் இஸ்லாஹ் அல் இஜ்திமாஈ
. அல்ஹய்அதுல் கைரிய்யா அல் ஆலமிய்யா அல்இஸ்லாமிய்யா
. ஜம்இய்யத் அப்துல்லாஹ் அந்நூரி அல் கைரிய்யா
. பைத்துஸ் ஸகாத்
. குவைத் பல்கலைக்கழகம்
. இஸ்லாமிக் பவுன்டேஷன் - டண்டன்
. லண்டன் பல்கலைக்கழகம் (SOAS-School of Oriental and African Studies)
. முஸ்லிம் எய்ட் - லண்டன்
. இஸ்லாமிய அழைப்புப் பணி மையம் - லண்டன்
. இஸ்லாமிக் கவுன்ஸில் ஒப் விக்டோரியா - மெல்பன்
. வைட் செபல் பளளி;வாசல் - லண்டன்
. IIU - பாகிஸ்தான் (International Islamic University)
. இக்ரஃ ரிஸோஸ் சென்டர் (நம்பிக்கை சஞ்சிகை - மலேஷியா)
. கெப் - (பினாங்கு)
. மஸ்ஜித் இந்தியா (மலேஷியா)
. திருவனாங்கோடு முஸ்லிம் யூனியன் - சிங்கப்பூர்
இஸ்லாமிய அறிஞர்களுடனான தொடர்பு
சமகால இஸ்லாமிய உலகில் இஸ்லாமிய எழுச்சிக்காக உழைத்து வரும் முக்கியமான அறிஞர்களுடன் அஷ்ஷெய்க் அகார் முஹம்மத் அறிமுகமானவர். அவர்களில் குறிப்பிட்டுக் கூறக் கூடியோர்:
• கலாநிதி ஷெய்க் யூஸுப் அல் கர்ளாவி - கடார்
• கலாநிதி ஹுஸைன் ஹாமித் ஹஸ்ஸான் - எகிப்து
• பேராசிரியர் அஹ்மத் அஸ்ஸால் - எகிப்து
• கலாநிதி ஹஸன் அஷ்ஷாபிஈ - எகிப்து
• கலாநிதி குர்ஷித் அஹ்மத் - லண்டன்
• பேராசிரியர் அனீஸ் அஹ்மத் - பாகிஸ்தான்
• கலாநிதி மனாஸிர் அஹ்ஸன் - லண்டன்
• கலாநிதி கமால் ஹஸன் - லண்டன்
• பேராசிரியர் அஸ்மி உமர் - மலேஸியா
• கலாநிதி தமிழன்பன் - இந்தியா
• கலாநிதி டாத்தோ இக்பால் - மலேஸியா
• முஹம்மத் இத்ரீஸ் - மலேஸியா
• கலாநிதி ஸமீர் - பஹ்ரைன்
• ஷெய்க் ராஷித் அல்கன்ணூஷி - லண்டன்
• ஷெய்க் நாதிர் நூரி - குவைத்
• கலாநிதி ஸுலைமான் அல் அதீகி - குவைத் இவர்களோடு மறைந்த மர்ஹும்களான ஷெய்க் அல் கஸ்ஸாலி, மௌலானா அபுல்ஹஸன் அந்நத்வி ஆகியோருக்கும் இவர் அறிமுகமானவர்.
ஆர்வம் காட்டும் துறைகள்
. ஹதீஸும் அதன் கலைகளும்
. தஃவா
. இஸ்லாமிய கற்றல், கற்பித்தல் தொழிற்பாடு
. இஸ்லாமிய உளவளத்துணை
. பிக்ஹுல் அகல்லியாத் (சிறுபான்மையினருக்கான பிக்ஹ்)
. இஸ்லாமிய நிதி, வங்கியல்
சிந்தனையும் ஆளுமையும்
இஸ்லாமிய எழுச்சி, சமூகமாற்ற தளங்களில் அக்கறைக்குரிய பல்வேறு விடயங்களில் பங்கெடுத்துள்ள இவர் தான் முன்வைக்கும் சிந்தனைக்கு முழுப்பொறுப்புள்ளவராக நடந்துகொள்கிறார். இஸ்லாமிய சிந்தனையில் நடுநிலைப் போக்கைக் கடைப்பிடிக்கும் இவர் பிரதான நீரோட்டத்தில் பணிபுரிவதையும் வேற்றுமையில் ஒற்றுமை காண்பதையும் வலியுறுத்தி வருகின்றார். இஸ்லாமிய அமைப்புக்களுக்கிடையில் இடைவினையாற்றுதல், சகஜீவன நிலை நின்று இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல், பல்வேறு நாகரிக, மதப் பண்பாடுகளுக்கிடையில் உரையாடல்களை நிகழ்த்துதல் இவரது அக்கறைக்குரிய விடயங்களாகும்.
இஸ்லாமியத்துறையை அதன் நியமங்களுக்கேற்பவும் அந்த நியமங்களிலிருந்து வழுவாமலும் அதற்குரிய ஒழுகலாற்று நடைமுறையை மீறாமலும் கொண்டு செல்லும (Discipline) இவர் எழுத்துக்களிலும் பேச்சுக்களிலும் அடிநாதமாக விளங்குகின்றது. அதாவது விதிமுறை நோக்கு தவறா பயில்முறையே இவர் கடைபிடிக்கும் நடைமுறையாகும்.
எளிமை, தெளிவு, மரபில் புத்துயிர்ப்பாக்கம், சர்வதேசத்தன்மை இவர் எழுத்திலும் பேச்சிலும் விரவிக்கிடக்கும் ஆளுமைப்பண்புகளாகும்.
ஷெய்க் அகார் அவர்களின் புலமை வலு அறபு வழியிலான நவீன இஸ்லாமிய சிந்தனை நிலை நின்று இன்றைய முஸ்லிம் வாழ்வியல் எதிர்நோக்கும் நெருக்கடிகளைப் பரிசீலிப்பதாகும். அவரது எழுத்தும் உரையும் தெரிந்த கருத்துப்புலங்களுக்கு நம்மை அறியாத முறையில் அழைத்துச் செல்வதுதான். வேறு வார்த்தையில் கூறுவதாயின் இவர் எங்கு பேசினாலும் உரையாடினாலும் அங்கே காதுகளும் டயவநளவஒட்டிக்கொள்ளும் அளவுக்கு ஓர் ஈர்ப்பிருக்கிறது. நேரம் பற்றிய பிரக்ஞை எழாது கால வெளியைக் கடந்து செல்வதுதான் அவரது உரையின் அற்புதம். அனர்த்தம் பற்றிய இஸ்லாமிய நோக்கில் ஆற்றிய உரையும் சிறுபான்மைக்கான பிக்ஹ் பற்றிய ஆய்வுரையும் செழுமையும் முழுமையும் கொண்டதாகும்.
சுன்னா பற்றிய ஆழமான அறிவும், வரலாற்றுப் பிரக்ஞையும் சர்வதேச ஊடாட்டங்களும், தஃவா, சமூகப் பணிகளும் அவர் ஆளுமையைப் பளிச்சிட்டுக் காட்டுகின்றன. இச்சிறிய தீவிலிருந்து அவரது ஆளுமை வெளிப்பட்டு சர்வதேச பரப்புக்குள் விகசிக்கத் தொடங்கியுள்ளது.
No comments:
Post a Comment